Sunday, June 22, 2014

பிணம் எழுதும் கவிதை




உன்னை இழந்த நாள் முதல்
நான் - நினைக்கும் திராணியுடன்
நடக்கும் பிணம்

உன்னை நினைத்து
பின்னால் அலைந்தவனை
உனக்காவே உழைக்க வைத்து
உருவாக்கி அழகு பார்த்தாய்

நினைக்காத பணியையும்,
நிறைய நிறைய பணத்தையும்,
உனக்காக ஆக்கிவைத்தேன்... - பிறகேன்
பிணமாக்கிப் பிரிந்து போனாய்...

வாங்கிய பொருளெல்லாம்
வாழ்க்கைக்குப் பொருளாகுமா...

அழுக்கும், பசியும் இருந்த போது
இத்தனை வலியை
சுமந்ததில்லை - நீ
எல்லாம் கொடுத்துவிட்டு
இல்லாமல் போனதனால்
வறுமையினும் வறுத்தெடுக்கும்
வாலிபப் பெருங்கொடுமை...

மருளும் விழிகளுக்குள்
உலவிக்கொண்டிருக்கிறாய்...
காட்சிப்பிழை கொண்டு
மோதிச் சிதைகிறேன்...

இதயக்குவியலுக்குள்
சருகாகாத பச்சிளங் குவியலாய்
நம் பழகிய காலங்கள் தான்
எஞ்சியிருப்பதெல்லாம்...

காலம் திரும்பாதென்று
மூளை உரைத்தாலும்,
நீயே இல்லையென்ற
நிதர்சனப் படுகுழிக்குள்
மூழ்கிப் புதையுதடி
தாங்காதச் சிறுமனது

ஆற்றாமல் கடந்தாலும்
போற்றியே தீருவேன்
செத்துங் கொடுக்குமிந்த
மோசமான காதலினை..!
நடைபிணம்,
-தமிழ் வசந்தன்