Saturday, July 31, 2010

பிழைத்துப் போ பெண்ணே



ஆடிப்பார்க்க இதயம்
பகடைக் காய் அல்ல

பாசாங்கு வார்த்தைகள் - இனி
பலிக்காது தோழி

இருந்தால் - எனக்கு
இடபாகமாய் இரு
இன்றேல் - உன்
சுவாசக் காற்று கூட - நானிருக்கும்
திசை திரும்ப வேண்டாம்

பிழைத்துப் போ பெண்ணே
எனக்கின்னும் பிறவி இருக்கு

-தமிழ் வசந்தன்

Thursday, July 29, 2010

ஒரு பொன்வீணைக் கனவு



சித்தத்தில் நித்தம் - ஒரு
சந்தம் அது நிகழ
என்னென்றுக் கண்டேன் - அது
பொன் வீணைக் குரலோ

மண்றாடிக் கண்டேன் - அதை
மீட்டும் முகம் எதுவோ?
செந்தாழம் விரல்கள் - அதில்
சந்தங்களின் பிறப்போ!

பொன் வீணை நரம்பில் - கலை
விளையாடிடும் விரலோ?
கண்டேன் களி கொண்டேன் - அவள்
இசையின் திருவுருவோ?

-தமிழ் வசந்தன்

வழித்துணை



பின் செல்லும் மரங்கள் காட்டி. . . .
மழையில் தேநீர் பருகி. . . .
குகைக்குள் அலறி. . . .
கொண்டு வந்த புத்தகம் பகிர்ந்து. .  . .
பழகிப் பழகி. . . .
நீ இறங்கிச் சென்றுவிட்டாய்
நீ சென்ற இடத்தில்
நின்றுகொண்டிருக்கிறேன்
வந்த ரயில்
சென்றுவிட்டது!

-தமிழ் வசந்தன்

Wednesday, July 28, 2010

சொன்னாயே ஒரு வார்த்தை


அடிப்பாவி. . . .
பேசினோம். . .  பழகினோம். . .
சிரித்தோம். . .  மகிழ்ந்தோம். . .
முற்றும் உணர்ந்தபின்
முழுதாய் மனம் தேற்றி
தயங்கித் தயங்கி தைரியம் ஏற்றி
பல முறை பயிற்சித்து
ஒரு முறை சொன்னேன்.
சொன்னாயே ஒரு வார்த்தை
"சரி தான். டபாய்க்காதடா"

-தமிழ் வசந்தன்

திட்டமிட்ட சதி



ஒரு நாள்
எல்லோருக்கும் மத்தியில் - நான்
அவள் மூக்கை உடைத்தேன்
பதிலுக்கு அவள்
யாருக்குமே தெரியாமல் - என்
இதயத்தை உடைத்துவிட்டுப்
போகிறாள்!

-தமிழ் வசந்தன்

நீர்மேல் எழுத்து

என்னவெல்லாம் செய்தாய். . . .
நீரில் கோலமிட்டாய்
மணலில் வீடு செய்தாய்
கரையில் எழுதிவைத்தாய்
அவை அழிந்தபோதெல்லாம்
அழுதேன் - நீ
ஆசையாய் வடித்ததை எண்ணி! - நீயோ
ஆசையையே அழித்துவிட்டு
ஆயாசமாய்ப் போகிறாய்!

-தமிழ் வசந்தன்

தவப்பயன்




விழி மொழியிலே - அன்பே
வழி மொழிதலை
மயிலிறகினால் - உயிரை
வருடுமுணர்வை

அடி மனதிலே
இருக்கும் வலியை
அணுத்துகளையே
செதுக்கும் கலையை

காதலாய்
தவம் இருந்தேன்
காற்றிலென்
கவி கலந்தேன்

இருகரை கொண்டு ஒரு நதி ஓட
கரையில் நான் நின்று காதலில் வாட
ஒருதலைக் காதல் மறுகரை தேட
மறுத்தது கண்டு

உயிரிலே
துயரமும்
கலந்து கொண்டதோ. . .

நீ போகிறாய் என்று
தெரு வழியில் இதயத்தை விட்டால்
ஏன் வந்ததோ என்று
நடுத்தெருவிலே நசித்துச் சென்றாய்!

-தமிழ் வசந்தன்

கனைகள்



ஒரே ஒரு கேள்வி
கவிஞன் காலமாக. . .
படைப்பாளி பாடையேற . . .
கலைஞன் குடைசாய. . . .
அப்பப்பா. . . இப்படியா . . .
கனைகள் என் கேள்விகள் அல்ல
உக்கிரமான உன் ஒற்றைப் பதில்!

-தமிழ் வசந்தன்

அவளும், 'நான்'களும்



நான் இங்கே. . . . நீ அங்கே . . . .
ஏதோ, என் மீது கசப்பு உனக்கு! உன் வாழ்வில் என் தலையீடு இருப்பதை வெறுக்கிறாய். நான் உன்னோடு உலகை வலம் வர விரும்புகிறேன்! நீயோ நீண்ட பாதையில் தனியாக நடந்து கொண்டு இருக்கிறாய்!

தார் சாலையில் தகலும் வெப்பம். கானல் நீருக்குள் புகுந்து மனதைப் பூட்டியபடி வெறும் பாதமாய் நீ. . . ! உன் உடல் சிவந்த போது, வெப்பமேறியிருக்கிறது பூமியில்! அத்தனைக்கும் காரணம் என் மீது உண்டான உன் வெறுப்பு. கதிரவனாய் இருந்தால் தட்டி வைத்திருப்பேன். இதை எப்படி. . .?

கதிரவன் மறைந்துவிட்டான். செவ்வானம் சிந்தனையைத் தூண்டுகிறது. மேகங்கள் வந்து போக. . . . ஞாபகங்களும் கூடவே திரிகிறது. தூரத்தில் தென்றல் கொஞ்சம் வருவதாகத் தோன்றுகிறது. நீ நினைக்கிறாய் "உனக்கு ஏன் அக்கறை?".

தூரத்தில் வந்த தென்றல் உன்னைத் துலாவியபடிச் செல்கிறது. நினைத்த மாத்திரத்தில் நான்! வெறுமையாய் இருக்கும் உனக்கு அருகே. நெடிய சாலை நம்மை வெறித்துப் பார்க்கிறது. "என் மேல் என்ன கோபம்?" நான் கேட்கிறேன். இன்னும் உனக்குக் கோபம் குறையவில்லை.

முகத்தைத் திருப்பிக்கொண்டாய். அங்கும் இன்னொரு 'நான்'! உன்னைக் கேட்டபடி!

திசை மாறுகிறாய். விடவே இல்லை நான்! - மற்றொரு 'நான்'!

நெடிய சாலையில் நெளிவு சுளிவுகளெல்லாம் நானாய் நிறைந்திருக்கிறேன்.

வானம் கருக்கிறது. காற்றின் அகோரக் குரல். நீ சுற்றும் முற்றும் திரும்புகிறாய். எங்கும் நீக்கமற 'நான்'!

வெறித்தபடி என் 'நான்'களின் நெரிசல்களை இடித்துக்கொண்டு தப்ப முற்படுகிறாய். காற்று சுற்றியபடி வந்து கொண்டிருக்கிறது.

நீ 'என்'களை மீறி ஓடுகிறாய். 'நான்'கள் எல்லோரும் துரத்துகிறோம். உன் கூந்தல் விரிய, புயல் மூண்டுகொண்டது.

எங்கெங்கினும் 'நான்'. போகிற பாதையெல்லாம் உன்னை 'நான்'கள் வரவேற்கிறோம். இறுதியில் 'என்'களைத் தாண்டி நிற்கிறாய்!

உன் தேகம் எங்கும் உஷ்ணம். விழி நீரெல்லாம் வியர்வையோடு சேர்ந்தே வழிகிறது!

என்னைத் தவிர மற்ற எல்லா 'நான்'களும் மறைந்துவிட்டோம்.
உன் நாடி பிடித்து. . . .
முகம் திருப்பி. . . .
விழிநீர் துடைத்து . . . .
நீ என்னை மனதார ஏற்றுக்கொண்டாய்!

மழை பொழியும் சாலையில்"நாம்"!
-தமிழ் வசந்தன்

Monday, July 26, 2010

வசை மொழியை நிறுத்திவிடாதே



வாய்மொழி வேண்டாம் அன்பே- நின்
வசைமொழியை நிறுத்திவிடாதே
திட்டும் போதாவது
கிட்டட்டும் - எனக்கு
மட்டற்ற இன்பம்

-தமிழ் வசந்தன்

காதல் பூக்கள்



நீரூற்றி உன்னைக்
காக்கவிட்டுத் தானே
சென்றிருந்தேன்
வந்து பார்ப்பதற்குள்
பூத்திருக்கின்றதே - இது
பூக்களா? காதலா?

-தமிழ் வசந்தன்

கல்லறைப் பூ



அடித்து உதைத்து
இடுகாட்டில் புதைத்துப்
போட்டாலும் சரி - உனக்காக
அங்கும் ஒரு பூ பூத்திருக்கும் - என்
கல்லறைச் சமாதிக்கு மேலே!

-தமிழ் வசந்தன்

கையெழுத்து



உன் நினைவாலோ
என்னவோ போ
கையெழுத்தைக் கூட
கவிதையைப் போலத் தான்
கிறுக்குகிறேன்

-தமிழ் வசந்தன்

ஊரெல்லாம் வெள்ளம்



உன்னை எண்ணிக்
கவிதை வடிக்கிற போது
ஊரெல்லாம் வெள்ளம் என்று
யாரோ சொன்னார்கள்
எனக்கெதற்கு அதெல்லாம்

-தமிழ் வசந்தன்

கொடுமையைப் பார்த்தீர்களா?



ஏறிப் பதினைந்து நிமிடம்
ஒன்றில்லை வேகத்தடை
கொடுமையைப் பார்த்தீர்களா?

-தமிழ் வசந்தன்

மௌனம்



வரிந்து கட்டிக்கொண்டு
வாய்ச்சண்டை போடுவதெல்லாம்
பெண்டிரின் பிறப்புரிமையாமே!
உனக்கெங்கே அதெல்லாம்
என்னிடமே இப்படி
மௌனம் சாதிக்கிறாய்!

-தமிழ் வசந்தன்

உண்மை எப்படி பொய்யாகும்?



விந்தையைப் பார்த்தாயா
நான் உன்னைப் பற்றி
உண்மையைச்
சொல்லிக்கொண்டிருக்கிறேன்
உலகம் இதைக்
கவிதை என்கிறது!
உண்மை எப்படி
பொய்யாகும்?

-தமிழ் வசந்தன்

கண்ட பின்பு சொல்லுங்கள்



என் பெண்ணிலவைக்
கண்டபின்பு சொல்லுங்கள் - இது
வெண்ணிலா என்பதையெல்லாம்!


-தமிழ் வசந்தன்